பந்தைய விளை யாட்டுகளில் முன்னணியாக இருப்பவை பார்முலா 1 என அழைக்கப்படும் கார்பந்தய தொடராகும். இந்த தொடரில் 7 முறை உலக சாம்பியன்ஷிப், 91 பந்தய வெற்றிகள் உட்பட பல்வேறு சாதனைகளை படைத்தது முடிசூடா மன்னனாக வலம் வந்த மைக்கேல் ஷூமாக்கர் (ஜெர்மனி) 2013-ஆம் ஆண்டு பனிச்சறுக்கு விளையாட்டின் போது காயமடைந்தார். அன்று முதல் தற்போதைய காலகட்டம் வரை சுயநினைவின்றி கோமா நிலையில் இருக்கும் ஷூமாக்கருக்கு வீட்டிற்குள்ளேயே மருத்துவமனை அமைத்து வெளிஉலகிற்கு தெரியாதபடி அவரது மனைவி கொரினா பாதுகாத்து வருகிறார். ஷூமாக்கரின் சிகிச்சை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் கசிந்தாலும் அவரது மனைவி அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் திரை மறைவிலேயே கணவரை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஷூமாக்கரின் முன்னாள் மேலாளரான வெப்பர் கூறிய தகவலை மிரர் செய்தி நிறுவனம் (mirror.co.uk) செய்தியாக வெளியிட்டு கார் பந்தய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த செய்தியில், “நான் ஷூமாக்கரை காண பல முறை அனுமதி கேட்டும் ஷூமாக்கரின் மனைவி கொரினா மறுத்து வருகிறார். ஷூமாக்கர் என்ன நிலையில் உள்ளார் என எனக்கு தெரியவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறியவே நான் முயற்சித்து வருகிறேன்” என பதிவிடப்பட்டுள்ளது. ஷூமாக்கருக்கு வலதுகையாக செயல்பட்ட வெப்பரை பார்க்க அவரது மனைவி அனுமதிக்கவில்லை என்றால் அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாரா? என ஐரோப்பா ஊடகங்களில் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும் ஷூமாக்கரின் கவலைக்கிடமான தகவல் குறித்து அவரது மனைவி தரப்பில் எவ்வித கருத்தும் கூறவில்லை என்பது குறிபிடத்தக்கது.